தமிழ்நாடு

tamil nadu

பாஜகவின் அரசப் பயங்கரவாதம் தான் ஸ்டான் சாமியை கொன்றது - திருமாவளவன் எம்பி

பாஜகவின் அரச பயங்கரவாதத்தால் தான் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்துள்ளார் எனவும், இது கரோனாவால் ஏற்பட்ட மரணமல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 5, 2021, 8:11 PM IST

Published : Jul 5, 2021, 8:11 PM IST

Updated : Jul 5, 2021, 9:08 PM IST

ஸ்டான் சாமி
ஸ்டான் சாமி

சென்னை: பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை என்றே பாதிரியார் ஸ்டான் சாமியின் இறப்பைக் கூற வேண்டும் என தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாஜக அரசால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.

இதை கரோனா மரணமாகக் கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை என்றே கூறவேண்டும்.

பாஜக அரசின் இந்த ‘சட்டம் சார் பயங்கரவாதத்தை’ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாஜகவின் அரச பயங்கரவாதம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் மத்தியில், அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்கப் பாதிரியார் ஆவார்.

அவரைக் கடந்தாண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது. பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரைத் தொடர்புபடுத்தி, பாஜக அரசு அவரை சிறையில் அடைத்தது.

இந்தியா முழுவதும் மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இதே பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டான் சாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதின்பேரில், கடந்த மே மாதம் 30ஆம் தேதி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விசாரணையின் போது மரணம்

மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜுலை 5) விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் இன்று(ஜூலை 5) பிற்பகல் 1.30 மணிக்கு அவர் உயிரிழந்தார் என்ற இந்த செய்தியை நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பேராசிரியரும் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டேவை பிணையில் விடுவிக்க வேண்டுகோள் விடுத்து, விசிக சார்பில் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தோம். இந்தச் சூழலில் ஸ்டான் சாமியின் மரணம் நேர்ந்திருக்கிறது.

அனைத்தும் போலி வழக்குகள்

பீமா கோரேகான் வழக்கு என்பது கணினியில் உளவு நிறுவனங்களே பொய்யான ஆதாரங்களைப் பதியவைத்து போலியாக உருவாக்கப்பட்ட வழக்குதான் என்பதைத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களோடு நிரூபித்துள்ளனர்.

இந்தச் சூழலில் நீதிமன்றம் தொடர்ந்து இதில் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது. ஏற்கனவே சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் மூலமாக கோவிந்த் பன்ஸாரே, நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி, ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த வழக்குகளில் தொடர்புள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பை இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நடவடிக்கை எடுக்க பாஜக அரசு முன்வரவில்லை.

சிந்தனையாளர்களை விடுவிக்க வேண்டும்

முன்பு சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பு செய்த படுகொலைகளை இப்போது சட்டத்தின் துணையோடு பாஜக அரசு செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதையே ஸ்டான் சாமியின் மரணம் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கும், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனையாளர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மரணமடைந்த மனித உரிமைப் போராளி ஸ்டான் சாமிக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்

Last Updated : Jul 5, 2021, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details