தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்றாவது அலை வர வாய்ப்பு இல்லை என கூற முடியாது - ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை என கூற முடியாது என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 23, 2021, 4:53 PM IST

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (அக்.23) நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி முகாமில் இரண்டாவது தவணை செலுத்த வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 1.1 ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கால அவகாசம் முடிந்து இரண்டாவது தவணை செலுத்த வேண்டிய 57 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்று (அக்.23) நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பிய 32 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர். அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

வதந்தி

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 4 லட்சம் முதியவர்கள் இருக்கும் நிலையில் 47 லட்சம் பேர் தான் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அவர்களில் 20 விழுக்காடு பேர்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதியவர்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 68 விழுக்காடு பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 26 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்று தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 70 விழுக்காடு பேர் தடுப்பூசி செலுத்திய நிலையை அடையும் என எதிர்பார்க்கிறோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்

100 கோடி தடுப்பூசி செலுத்திய பின்னரும் வதந்தியை பரப்புவது வருத்தமளிக்கிறது. கரோனா தொற்று நாமக்கல் மாவட்டத்தில் சற்று அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்று அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பண்டிகை காலத்திற்குப் பின்னர் தோற்று அதிகரித்துள்ளது” என்றார்.

மூன்றாவது அலை வர வாய்ப்பு

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் பண்டிகை காலங்களில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அதே நேரத்தில் மூன்றாவது அலை வராது என கூற முடியாது.

கரோனா தொற்று பரவும் விகிதம் மாநில அளவில் 0.9 ஆக குறைந்துள்ளது. மாநில சராசரியை விட சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனை குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டெங்குவை கட்டுப்படுத்த 21 ஆயிரத்து 930 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளாட்சித் துறையின் மூலம் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை தொற்று உறுதி

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மரபனு பகுப்பாய்வு மையத்தின் மூலம் தற்போது வரை 543 கரோனா தொற்று பாதித்த நோயாளிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 43 பேருக்கு டெல்டா வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 500 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களில் 87 விழுக்காடு பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள். 9 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்கள். 4 விழுக்காடு பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிற நோய்கள் காரணமாக இறந்துள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details