ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான இன்று(ஏப்ரல்.22) தமிழ்நாடு முழுவதும் மண் காப்போம் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
'மண்ணோடு தொடர்பில் இருங்கள்' என்ற தலைப்பில் சென்னை விமான நிலையத்தில் மண் வளத்தை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மண் வளத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மண்வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
மண் வளத்தைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தேவையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி, ஈஷா நிறுவனர் சத்குரு, 'மண் காப்போம்' என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ., மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து அந்நாட்டு தலைவர்களுடன் மண் வளப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடன இயக்குநர் கலா கூறுகையில், ”மண் கப்போம் பற்றி பேசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மண்ணைப் பற்றி நாம் பேசுவது கிடையாது. ஆனால், இந்த மண் தான் கோடான கோடி ஜீவன்களை வாழ வைக்கிறது. 27 ஆயிரம் நுண்ணுயிர் இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அழிந்து கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் நாம் தான்.