எஸ்.பி. வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 10) லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இந்தச் சோதனை நடைபெற்றது.
சோதனை ஆரம்பித்த உடனேயே கோயம்புத்தூரில் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் வாகனத்தில் வந்து இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோன்று சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் பெரும்பாலும் தங்காத எஸ்.பி. வேலுமணி, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) இரவு வந்து தங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.