சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இளைஞர் நாடாளுமன்றம் குறித்து மாநகராட்சி சார்பில் விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 'சென்னைப் பள்ளி மாணவர்களிடையே மேடைப் பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைப் பண்பை வளர்க்கவும், சர்வதேச விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி ஐக்கிய நாடுகள் குழு அமைக்கப்பட உள்ளது.
மேலும் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்தவும், ஒழுக்கம், சகிப்புத்தன்மை, ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், பொறுப்புள்ள இளைஞர்களை உருவாக்கவும், நாடாளுமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில், இளைஞர்கள் நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றம் அமைக்கப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர் நாடாளுமன்றங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4ஆவது வாரம்- 5 அமைச்சர்கள் பதவி உருவாக்கப்படும் என்றும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தலைவர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்; ஆகஸ்ட் 2, 3ஆவது வாரத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், செப்டம்பர் முதல் வாரத்தில் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல் - சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!