Prohibition on conducting live classes:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
கரோனா வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதால், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தன.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும், அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 100 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும்
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜனவரி 10ஆம் தேதி வரையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தத் தடைவிதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.