சென்னை: தலைநகர் சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதில் முதற்கட்டமாகச் சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் கரோனாவிற்குப் பிந்தைய முதற்கட்ட முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர்.
15 இடங்களில் பரிசோதனை மையம்
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சேகர்பாபு கூறியதாவது, "கரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்றைத் தடுக்கும்வகையில் தமிழ்நாட்டிலேயே சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவிற்குப் பிந்தைய முதல்கட்ட உடல் பரிசோதனை மையம் அமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி செய்துவருகிறது.
மேலும் தற்போது ராயபுரம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் தொலைபேசி ஆலோசனை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. விரைவில் 15 மண்டலங்களிலும் பொதுமக்களுக்காக தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி செய்துவருகிறது.
சென்னையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஐந்து பேர் வீதம் சுமார் ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.