சென்னை: திரைப்பட நடிகர் வீட்டில் திருடிய செவிலியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருபவர் காயத்ரி சாய்நாத். இவர் அஞ்சலி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டில் வந்து பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்காக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தைச் சேர்ந்த சிவகாமி (44) என்ற செவிலியர் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.
இவ்வேளையில் தன் வீட்டில் வைத்திருந்த 12 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை காயத்ரி சாய்நாத், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்த சிவகாமி மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதனடிப்படையில் மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வீட்டிலிருந்த கண்காணிப்புப் படக்கருவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது செவிலியர் சிவகாமி நகையை திருடுவது பதிவாகி இருந்ததால் தலைமறைவாக உள்ள சிவகாமியை தேடி வந்தனர்.
காவல் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் சிக்கிய சிவகாமி இடமிருந்து 5 சவரன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீதமுள்ள நகைகள் குறித்து சிவகாமியிடம் நடத்திய விசாரணையின் போது, திருடப்பட்ட 12 சவரன் நகைகளில் 7 சவரன் நகைகளை அடகு வைத்து, அதில் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை தனது குழந்தைகளுக்கு காப்பீடு பெற்றதாகவும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கடன் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மீதமுள்ள நகை கவரிங் போல இருந்ததால், அடகு கடையில் வைத்தால் காவல் துறையினரிடம் சிக்கிவிடுவேன் என்றெண்ணி 5 சவரன் நகைகளை கையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் சிவகாமியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.