திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்து, திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாழடைந்தன. இது தொடர்பாக கடந்த 1996 முதல் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆலை உரிமையாளர்கள் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டுமென கடந்த 2003 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் 25 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அது தவிர அபராதமாக வசூலிக்கப்பட்ட 42.02 கோடி ரூபாய், இழப்பீடாக வசூலிக்கப்பட்ட 7.64 கோடி ரூபாய், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வசம் இருத்தது. தமிழக அரசும் இழப்பீடாக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது.
விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட இத்தொகைகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட 29 ஆயிரத்து 956 விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கச் செய்யக்கோரி கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.