இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இதுவரை மாநிலத் தேர்வாணையம் நடத்தும் மாநிலத் தகுதித் தேர்வு (State Eligibility Test -SET), தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test - NET) ஆகியவற்றில் தேர்ச்சியடைந்த முதுகலைப் பட்டதாரிகள் மூலம் நிரப்பப்பட்டுவந்தன. இவை தவிர, முனைவர் பட்டம் பெற்றவர்கள் நேரடியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநில, தேசிய தகுதித் தேர்வுகள் (SET & NET) நடத்தப்படாத சூழலில், மத்திய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission - UGC) உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு முனைவர் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை அளித்தது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவே உள்ளனர். அவர்கள் பல்வேறு சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டியே உயர்கல்வி படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும், முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் மிக அதிகமான பொருட்செலவும், கால அளவும் தேவைப்படும் தற்காலச்சூழலில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் முனைவர் பட்டம் பெறுவதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது.