சென்னை:தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியருக்குக் குறைவான சம்பளம் வழங்கியதால், அவர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில், குறைவான ஊதியம் வழங்கியதால் பேராசிரியர் ரவி தற்கொலை செய்துக்கொண்டதாக எழுந்த புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மீது பேராசிரியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குவது, பணப்பலன்களைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து, மாநிலத்தில் பேராசிரியர்கள் தற்கொலை தொடருவது குறித்தும் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2020ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அறிவுறுத்தியிருந்தது.