தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்எல்ஏ பிச்சாண்டி , எனது தொகுதியில் கீழ்பென்னாத்தூர் தாலுக்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அரசு சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார்.
மேலும் திருவண்ணாமலை மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கீழ்பென்னத்தூர் தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் அடிப்படையில், கரூர், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கும் போதே 150 இடங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போதைய விதிமுறைகளின் அடிப்படையில் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி துவக்கப்படும் போது, 100 இடங்கள் தான் பெற முடியும். ஆனால் மாணவர் சேர்க்கை 150ஆக உயர்த்த 10 ஆண்டுகள் முடிந்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வளர்ந்த மாநிலங்கள் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதில்லை. இருப்பினும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவதன் அடிப்படையில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடர்பான நல்ல செய்தி விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.