தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2020, 1:17 PM IST

ETV Bharat / city

நளினியின் விடுதலை கோரிக்கை - மத்திய அரசு எதிர்ப்பு!

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதால் நளினி தொடர்ந்த விடுதலை வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

nalini
nalini

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன் கருணை மனு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சட்டப்படி முடுவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு, வழக்கின் விசாரணையை இருதரப்பு வாதங்களுக்காக பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மீனவர்கள் நிவாரணத் தொகை வழக்கு - பல்வேறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்!

ABOUT THE AUTHOR

...view details