முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.