தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘சுகப்பிரசவம் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும்’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள்

அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Published : Sep 4, 2022, 6:05 PM IST

சுகப்பிரசவம் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும்
சுகப்பிரசவம் பெறுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 35-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (செப்.04) நடைபெற்றது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 50ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறும்போது, ”நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் பல சுணக்கங்கள் இருந்த போதிலும், மக்களிடையே நோயின் தாக்கங்கள் இருந்த போதிலும், அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 96.26 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 90.15 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை. கரோனா பாதிப்பு அதிகமாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். தமிழ்நாட்டில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் .சுமார் 26 லட்சம் பேர் முதல் தவணையும், 86 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். உலகளவில் கரோனா அச்சுறுத்தல் இன்றும் உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக உள்ளது. எனவே தமிழ்நாடு தன்னை தற்காத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 30 வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் . சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கான சட்டமசோதாவில் திருத்தங்கள் வேண்டும் என கடிதம் எழுதி இருந்தனர்.

அதற்கான விளக்கங்கள் சட்ட வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்டு, பூர்த்திச் செய்யப்பட்டு, தற்பொழுது தலைமைச் செயலாளரிடம் இருக்கிறது.அந்த கோப்பு எனக்கு நாளையோ, நாளை மறுநாளோ வந்தப் பின்னர், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, அதன்பின்னர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். மகப்பேறு மருத்துவமனைகளில் சிசேரியன் முறையை தவிர்த்து சுகப்பிரசவம் என்பதையே நடத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.

மகளிர் கர்ப்பம் அடையும் காலம் தொடங்கி நல்ல உணவு முறைகள், உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவையுடன், யோகாவும் அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் சுகப்பிரசவம் என்ற முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால், கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.

சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் . மேலும், மழைக்காலத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் கள் அதிகரிப்பது வழக்கம். எனவே மாவட்ட அளவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. டெங்கு பரவல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மருந்துகள் கைவசம் தயாராக உள்ளது. கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமை பெண் திட்டம்’ நாளை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details