சென்னை: சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த வட கிழக்கு பருவமழையின் போது, வெள்ள பாதிப்பு சென்னையில் பெருமளவில் இருந்தது. கடந்த 2011 ஆண்டுக்கு பிறகு மழைநீர் அகற்றுவதற்கான பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
நீர் தேங்க காரணம் என்ன? :எனவே, சைதாப்பேட்டையில் மட்டும் சுமார் 27 தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. வரும் பருவமழை முன்பாக இந்தப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரை அழகுப்படுத்துகிறோம் என அலங்கோலப்படுத்தி விட்டனர். நடைபாதைகளை அகலப்படுத்துவதாகக் கூறி, மழைநீர் வடிகால்களை மூடியதால்தான் கடந்த பருவமழையின்போது தியாகராயர்நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தான், தற்போது மழைநீர்வடிகால்கள் சீரமைப்பு, புதிய வடிகால்கள் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் நிலையை நிரந்தரமாக தவிர்க்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களை தேடி மருத்துவம்: 'மக்களை தேடி மருத்துவம்' ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில், சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்து உள்ளனர். உலக வரலாற்றில் வீடுகளில் தேடிச்சென்று 70 லட்சத்திற்கு மேலாக மருந்துகள் தருவது மருத்துவம் செய்வதும் போன்ற மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.