தமிழ்நாடு

tamil nadu

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கரோனா கட்டுப்பாடுகள் - நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல்

By

Published : Feb 4, 2021, 10:05 AM IST

சென்னை: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மீதமுள்ள நாள்களிலும் முழுவதுமாகப் பின்பற்ற அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தது.

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா
திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா

கரோனா ஊரடங்கு விதிகள் உள்ளதால், கடந்த டிசம்பர் 27ஆம் தேதிமுதல் பிப்ரவரி 12ஆம் தேதிவரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்குள் பக்தர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சிங்காரவேலன் என்பவர் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கரோனா சான்று தேவையில்லை என்றும், பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்துவிட்டு அனுமதிக்க வேண்டுமெனவும், அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (பிப். 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி கரோனா தடுப்பு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலான மீதமுள்ள நாள்களிலும் கரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றும்படி புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: திமுகவில் அண்மையில் இணைந்த ராஜீவ் காந்திக்கு புதிய பொறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details