சென்னை: கரோனா தொற்றுப் பரவலை தொடர்ந்து தேர்வுகளை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்ததுடன், ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்-லைன் மூலமாகவோ தேர்வுகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தாக்கல் செய்த அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்வி வாரியம் ஆகியவை தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு ரத்து தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாணவர்களுக்கு, உள் மதிப்பீட்டு (இன்டெர்னல்) மதிப்பெண்களையும், முந்தைய பருவத் தேர்வில் (எக்ஸ்டர்னல்) பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு அரியர் தேர்வு மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மதிப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும் துணை தேர்வுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடத்தப்பட்ட துணைத்தேர்வுகளில், 2 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள் அரியர் தேர்வுகளை எழுதியுள்ளதாகவும், தேர்வுகள் நடத்தி, மதிப்பீடு செய்யும் நடைமுறை நடந்து வருவதால், இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
நேற்று (மார்ச் 11) இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க:'புதிய கல்விக் கொள்கையால் நவீன கல்வி முறை புகுத்தப்படும்' - குடியரசுத் தலைவர்