சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அவரது குடும்பத்தினர் பெயரில் அதிகளவில் சொத்துக்கள் குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் வழக்குபதிவு செய்து சசிகலாவிற்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வருகிறது.
அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகலாவிற்கு தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புடைய சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரூ.300 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது. அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டினர்.