தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஆதுகேசவலு அடங்கிய முழு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு திட்டமும் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக, நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கை கோரியுள்ளதாகவும், அவை கிடைத்த பின் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.