சென்னை: தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட 'ஒமைக்ரான்' வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கர்நாடகாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு தெரியவந்தது. அதன்பிறகு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் பரவியது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்படி, தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.
4 பன்னோக்கு மருத்துவர்கள்
கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு செல்லும் இந்த குழு, ஒமைக்ரான் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் குழுவில் மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.