தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2020, 4:14 PM IST

ETV Bharat / city

சுத்தம்செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.500 ஒதுக்கீடு

சென்னை: பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னர் சுத்தம்செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 500 ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவர்கள், பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

schools
schools

பள்ளிக் கல்வித் துறையில் செயல்பட்டுவரும் மாநிலத் திட்ட இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2020-21ஆம் கல்வி ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காகப் பள்ளிகளில் மாணவர்களின் ஆராேக்கியம், பாதுகாப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கரோனா காரணமாக நோய்த்தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துவதும், தன் சுத்தத்துடன் பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளியில் ஏற்படுத்துவதும் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

எனவே பள்ளி வளாகம், வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.500 வீதம் 6,173 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கும், 31,297 அரசு தாெடக்க, நடுநிலைப் பள்ளிக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பொறுப்பாசிரியர் ஒருவரை நியமித்து பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாளில் தூய்மைப்படுத்தும் பணிகளை நடைபெறுவதை கல்வி அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.

பள்ளிகள் திறந்த பிறகு கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில், நோய் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, கரோனா நோய் தொற்று குறித்து ஒரு நாள் பயிற்சி வழங்க வேண்டும். அதற்கான பயிற்சி புத்தகம் வழங்கப்பட உள்ளது.

பயிற்சி பெற்றவர்கள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரோனா விழிப்புணர்வு குறித்து சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details