இந்திய பங்குசந்தைகள் கடந்த இரண்டு நாள்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துவருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 43,000 புள்ளிகளை கடந்துள்ளது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 12,631 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது, கரோனா தடுப்புமருந்து குறித்த ஃபைஸர் நிறுவனத்தின் நம்பிக்கைக்குறிய அறிவிப்பு ஆகியவற்றுடன் பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றியும் இணைந்துகொள்ள இந்திய பங்குச்சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.
இந்திய, சீனா உள்ளிட்ட உலகின் முக்கிய பொருளாதாரங்களில் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இன்னும் சில காலத்திற்கு இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி அட்வைசரி பிரிவின் தலைவர் தேவாங் மேத்தா, "பொதுவாகவே சந்தை நிச்சயமின்மையை விரும்பாது. கரோனா தடுப்புமருந்து குறித்த அறிவிப்பும், அமெரிக்க அதிபர் தேர்தலில் சுமுகமான முடிவு கிடைத்துள்ளதும் சந்தையை உற்சாகப்படுத்தியுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் வருவாய் சிறப்பாக உள்ளதும் சந்தையில் போதுமான பணப்புழக்கம் உள்ளதும் பங்குச்சந்தை உயர்வை மேலும் அதிகரிக்கும்" என்றார்.