இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு திணறிவருவதாக ஸ்டாலின் கூறுவது முற்றிலும் தவறானது என்று தான் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்பதை அமைச்சர் விஜய பாஸ்கர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
டிரான்ஸ்பர்களுக்கு மாமூல் வாங்கி கவரில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு மறைக்க ஆடும் நாடகம் போன்றது அல்ல. கரோனா பெருந்தொற்று மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. நாள்தோறும் செத்துமடியும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அவர் இவ்வளவு மரணங்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளவில்லை என்றால், இவரைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பெற்றது முதல் பாவம்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் மயக்கத்தில் இருக்கிறார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், அதிவிரைவு பரிசோதனை கிட், நியமனங்கள் ஆகியவற்றில் அடித்த பணம் அவரது கண்ணை மறைக்கிறதா? அல்லது அடித்த கமிஷனில் இதுவரை செலுத்தி வரும் கப்பம் தன்னைக் காக்கும் என்று நினைக்கிறாரா?
“கரோனா நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்” என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ஜனவரி 7ஆம் தேதியே எழுதிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் விஜய பாஸ்கரும் முதலமைச்சரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சருக்குக் கொஞ்சமாவது சுயமரியாதை இருக்குமென்றால், நிர்வாகத் தோல்விக்காக தன் துறை செயலர் மாற்றப்பட்டவுடன் தானும் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.
ஊழலும், பதவியும் தன் உடம்போடு ஒட்டிப் பிறந்துவிட்டதால் தன்மானத்தை கடன் கொடுத்துவிட்டு, கமிஷனே கதி என்று இருக்கும் விஜய பாஸ்கர் ஸ்டாலினைப் பார்த்து உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் ஆரம்பத்திலிருந்து அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, ரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கிவருகிறார். அவர் வைத்த கோரிக்கைகளையே ஒவ்வொன்றாக காலதாமதமாக இன்றைக்கு அரசு செய்து வருகிறதே தவிர, சுயமாக ஒரு முடிவையும் இதுவரை எடுத்து அறிவிக்கவில்லை.
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504. அதில் சென்னையில் மட்டும் 33,244. அமைச்சரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் 62. இந்த நிலையில் அமைச்சர் வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார். சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு போடும் அளவிற்கு படுதோல்வியடைந்து நிராயுதபாணிகளாக நிற்பது அமைச்சரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்தான்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேட்டியளிப்பதில் விளம்பரப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் விஜய பாஸ்கருக்கும், முதலமைச்சருக்கும் ஸ்டாலினைப் பேச எவ்வித தகுதியும் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளது.