தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2020, 12:13 AM IST

ETV Bharat / briefs

ஓ.பி.சிக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு : சமூக நீதி காக்க திமுகவுடன் காங்கிரஸும் இணைந்து நிற்கிறது!

சென்னை : மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளிக்க வலியுறுத்தும் திமுகவுடன் காங்கிரசும் இணைந்து நிற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஓ.பி.சிக்கான 50% இட ஒதுக்கீட்டை கேட்கும் திமுகவுடன் காங்கிரஸும் இணைந்து நிற்கிறது!
ஓ.பி.சிக்கான 50% இட ஒதுக்கீட்டை கேட்கும் திமுகவுடன் காங்கிரஸும் இணைந்து நிற்கிறது!

இதுகுறித்து அவர் இன்று(ஜூலை 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகின.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், தமிழ்நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதமும் அளிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

மத்திய கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டத்தின்படி, வெளிமாநிலங்களில் உள்ள மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதேசமயம், அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மாநில இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பது முக்கிய சாராம்சமாகும்.

தற்போது மருத்துவ இளங்கலை இடங்கள் 15 சதவிகிதமும், மருத்துவ முதுகலை இடங்கள் 50 சதவிகிதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. நீட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காததால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 8 ஆயிரத்து 121 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாடு சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 50 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் குரல் எழுப்பியும், மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன்மூலம், மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பின்தங்கிய வகுப்பினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பின்தங்கிய வகுப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியைக் களைவதற்காகவே அனைத்துக் கட்சிகளும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கான 50 சதவிகித ஒதுக்கீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டார். சலோனி குமாரி வழக்குக்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடுத்திருக்கும் வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தக் கருத்து உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்ட பின்னர், தற்போது கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து நீதி பெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற சமூக நீதியை, நீதிமன்றம் நிலைநாட்டும் என்ற நம்பிக்கையுடன் அனைத்துக் கட்சிகளும் காத்திருக்கின்றன”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details