கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி கடந்த மாதம் 12ஆம் தேதி அக்கட்சியின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை அளித்தார்.
அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது கரூர், கிருஷ்ணராயபுரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
எதிர்க்கட்சி உறுப்பினர்களான தன்னையும், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரையும் ஏன் அழைக்கவில்லை என்று கேட்டதாகவும், அதற்கு ஆட்சியர் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஒரு படித்த முட்டாள் என்று விமர்சித்து பேசினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தொற்று பரவும் காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் செந்தில் பாலாஜி மீது கடந்த 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிபிசிஐடி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரியிருந்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 11 மணியளவில் ஆஜராகி இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய பிணையை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது.
இந்த நிலையில் தாந்தோன்றிமலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி காலை 11 மணியளவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். அவருடன் திமுக வழக்கறிஞர்கள் பலரும் உடன் வந்திருந்தனர்.