பெங்களூரு : கர்நாடகாவில் 250 கிலோ தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து, ஓட்டுநரை தாக்கி விட்டு மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பருவமழை, பற்றாக்குறை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் ஒருசேர தக்காளி விலை அதிகரித்து காணப்படுவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடும் கிராக்கி காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்படும் நிலையில், அதனால் கூட ஒருசில இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 250 கிலோ தக்காளி ஏற்றி வந்த பொலிரோ பிக்-அப் வேனை மறித்து 3 பேர் கும்பல் ஓட்டுநரை தாக்கிவிட்டு வண்டியை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா அடுத்த ஹிரியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த 250 கிலோ தக்காளியை பொலிரோ பிக் -அப் வேனில் ஏற்றிக் கொண்டு விற்பனை முனையத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது முன்னால் சென்ற காரில் பயணித்த மூன்று பேர் பொலிரோ பிக் -அப் வேனை வழிமறித்து உள்ளனர். தங்கள் மீது இடித்ததாக கூறி பொலிரோ வேன் ஓட்டுநர் மற்றும் விவசாயியை சாலையில் இறக்கி மூன்று பேரும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கார் மீது இடித்ததற்கு பணம் தருமாறு மூன்று பேரும் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், வண்டியில் இருந்த தக்காளியை பார்த்ததும் மூன்று பேரின் மனம் மாறியதாக கூறப்படுகிறது. விவசாயி மற்றும் கார் ஓட்டுநரை சாலையிலேயே நிறுத்தி விட்டு தக்காளி ஏற்றிச் சென்ற வண்டியை மூன்று பேரும் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விவசாயி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 250 கிலோ தக்காளியுடன் பிக்-அப் வாகனமும் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயின் நிலத்தில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஜூலை 5 ஆம் தேதி திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :திருட்டு பயம்... பவுன்சர்களை பணியமர்த்தி தக்காளி விற்பனை...Thug life வியாபாரி!