நியூ யார்க் : பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் எதிரொலியாக, இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 105 பழங்கால கலை பொருட்கள் மற்றும் சிலைகளை அமெரிக்கா திருப்பி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க், மான்ஹட்டம் நகரில் இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 105 பழங்கால பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளதை முன்னிட்டு அதற்காக சிறப்பு வழியனுப்பு விழா விமரிசையாக நடைபெற்றத்தாகவும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து தெரிவித்து உள்ளார்.
அண்மையில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட பழங்கால கலைப் பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் எதிரொலியாக, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திருப்பி வழங்கப்பட உள்ளதாக இந்திய தூதர் தரண்ஜித் சிங் தெரிவித்து உள்ளார். பழங்கால பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வழியனுப்பு விழாவில் பேசிய இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து, மான்ஹாட்டம் மாவட்டம் நிர்வாகம், சிலை தடுப்பு பிரிவு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய மக்களைப் பொறுத்தவரை, பழங்கால பொருட்கள் வெறும் கலைப் பகுதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார். விரைவில் பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
105 தொல்பொருட்கள் இந்தியாவில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பரந்த புவியியல் பரவலைக் குறிப்பதாகவும், கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப் பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால் பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலை பொருட்கள், வட இந்தியாவில் இருந்து ஆறு மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்து மூன்று கலைப் பொருட்கள் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.
மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3ஆம் நூற்றாண்டு மற்றும் கிபி 18 - 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தது என்றும், கலைப் பொருட்கள் டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 கலைப் பொருட்கள் இந்து, ஜெயின், மற்றும் இஸ்லாம் மத விஷயங்களுடன் தொடர்புடையவை என்றும் மீதம் உள்ளவை கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :அரசு நிலத்தை அரசிடமே விற்று மோசடி.. ரூ.30லட்சம் மோசடியில் 3 பேரை தேடும் போலீஸ்!