பார்மர்:ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பார்மர் மாவட்டத்துக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மாநில அரசு மகளிருக்காக கொண்டு வந்துள்ள திட்டத்தால் பயனடைந்த பெண்கள் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்காக முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் கெலாட் பேச முயன்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மைக், சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து அருகே நின்று கொண்டிருந்த பெண் மற்றொரு மைக்கை முதலமைச்சரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட முதலமைச்சர் கெலாட், வேலை செய்யாத மைக்கை அருகில் நின்றிருந்த பார்மர் மாவட்ட ஆட்சியரை நோக்கி கோபத்தில் வீசினார். கீழே விழுந்த மைக்கை ஆட்சியர் எடுத்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசத் தொடங்கினார். அப்போது பெண்களுக்கு பின்னால் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த கெலாட், அவர்களை வெளியேறுமாறு கூறினார். காவல் கண்காணிப்பாளரை எங்கே என கேள்வி எழுப்பிய கெலாட், மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என விமர்சித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.