அகர்தலா:திரிபுரா மாநிலத்தில் தேயிலை உற்பத்தி தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. தேயிலைத் தோட்டத்தில் ஏராளாமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் நலனுக்காக அரசு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
திரிபுரா மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு வங்கி கடன், பல்வேறு வகையில் நிதியுதவி வழங்கப்படும், இது அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கூறுகையில், "தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்" என்றார்.