தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாதுகாப்பு விவரங்களை வெளிநாட்டினருடன் பகிர்ந்த வழக்கு... பத்திரிகையாளர், முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

டெல்லியில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் முக்கிய தகவல்களை உளவு பார்த்து, வெளிநாட்டினருடன் பகிர்ந்து கொண்ட வழக்கில் பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.

By

Published : May 18, 2023, 6:24 PM IST

CBI
சிபிஐ

டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த 'Defence News' என்ற இணைய ஊடகத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகள் தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தவர் விவேக் ரகுவன்ஷி. இவரது நண்பர் ஆஷிஷ் பதக். முன்னாள் கடற்படை அதிகாரியான இவர், தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்களை வெளிநாட்டினருடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள், பாதுகாப்பு அமைச்சகம் வாங்கவுள்ள பாதுகாப்பு கருவிகள் பற்றிய விவரங்கள், தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்கள், இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆகிய விவரங்களை, குறிப்பிட்ட நாடுகளின் உளவு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டது கண்டறியப்பட்டது. ஏற்கனவே இந்திய உளவு அமைப்பும் இதை உறுதி செய்தது. இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி போலீசார் ரகுவன்ஷி மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி ரகுவன்ஷி, அவரது கூட்டாளி ஆஷிஷ் மீது 2 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு தொடர்பாக டெல்லி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், விவேக் ரகுவன்ஷி மற்றும் ஆஷிஷ் பதக்கை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், "நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய தகவல்களை இருவரும் மறைத்து வைத்துள்ளனர். இருவரிடம் இருந்தும் உளவு கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு குறித்த விவரங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ரகுவன்ஷி ஒப்பந்தம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் இருந்து ரகுவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 14 இடங்களில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் லேப்டாப், டேப்லெட், செல்போன்கள், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் என 48 மின்னணு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைதான இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என கூறினர்.

இதையும் படிங்க: 5 வயது குழந்தையின் வயிற்றில் 12 கிலோ கட்டியா! அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details