ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.30) நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2023-தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 221 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். மேலும், தெலங்கானாவில் மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா தேர்தல் களம்: தெலங்கானாவைப் பொறுத்தவரை, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் பிஆர்எஸ் கட்சியின் நிறுவனரும், அம்மாநில முதலமைச்சருமான கே சந்திரசேகர் ராவ், காஜ்வெல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, பாஜகவின் எடெலா ராஜேந்தர் மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில், எடெலா ராஜேந்தர் காஜ்வெல் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி காமாரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கேசிஆர்-ஐப் போலவே இவர்கள் இருவரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.