மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய மோடி, "இந்த மாதம் கிரிக்கெட் ஆடுகளத்திலிருந்து நல்ல செய்தி கிடைத்துள்ளது. தொடக்கத்தில் சரிவு காணப்பட்டாலும், இந்திய அணி உற்சாகமாக மீண்டு எழுந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது. நம்முடைய அணியின் கடின உழைப்பு, கூட்டு உழைப்பு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது” எனப் பாராட்டியிருந்தார்.
பிரதமர் மோடியின் பாராட்டுக்கு பதில் அளித்து பிசிசிஐ ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது. அதில் “பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. தேசியக் கொடியை உயரப் பறக்கவிடும் அனைத்து வெற்றிகரமான செயல்களையும் இந்திய அணி தொடர்ந்து செய்யும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் கடந்த 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மைதானத்தில் தோல்வி அடையாமல் இருந்த ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது.
இதையும் படிங்க:ஆஸி.,க்கு எதிராக மெர்சல் காட்டிய தமிழக வீரர்கள்... முதலமைச்சர் பாராட்டு - நன்றி தெரிவித்த அஸ்வின்!