புதுச்சேரி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் தொடங்கி பள்ளி மாணவியை சமரசம் செய்த காவல் துறையினர், வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டத்தினை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இவ்வேளையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டத்தினை ரத்து செய்ய கோரியும், சாரம் பகுதியைச் சேர்ந்த தர்ஷினி(13) என்ற மாணவி காந்தி சிலை முன்பு காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
விவசாயிகளுக்காக சாலைக்கு வந்த பள்ளி மாணவி! தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் தர்ஷினி, வேளாண் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி இன்று (டிசம்பர் 14) அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், இதை தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு பிறகு காவல் துறையினரின் அறிவுறுத்தல்படி போராட்டம் கைவிடப்பட்டது. மாணவியின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.