தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 6, 2023, 7:39 PM IST

ETV Bharat / bharat

செகந்திராபாத் - அகர்தலா விரைவு ரயிலில் புகை... அலறியடித்து கீழே இறங்கிய பயணிகள்!

செகந்திரபாத்தில் இருந்து அகர்தலா செல்லும் விரைவு ரயிலில், ஏசி பெட்டியில் புகை வெளியேறியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர்.

Train smoke
ரயிலில் புகை

புவனேஸ்வர்:ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தால், ரயிலில் பயணிக்கவே சிலர் அச்சம் கொள்கின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு விரைவு ரயில் புறப்பட்டது. ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது, B5 ஏசி பெட்டியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் பெட்டி முழுவதும் புகை பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் ரயில் பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்துக்குள் வந்தது. இதையடுத்து அச்சம் அடைந்த பயணிகள் தங்கள் உடைமைகளுடன் அலறியடித்தபடி வேக வேகமாக கீழே இறங்கினர். பின்னர் அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், புகையை கட்டுப்படுத்தினர். எனினும் அந்த பெட்டியில் இனி ஏற முடியாது என்றும், மாற்று பெட்டி வழங்குமாறும் பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர். ரயிலில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியில்லை என கூறி, பயணிகள் சிலர் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து B5 பெட்டி பயணி ஒருவர் கூறுகையில், "ஏசியில் இருந்து புகை வருவதை கண்டேன். உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தேன். இந்த பெட்டியில் பயணம் செய்வதை நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை" என்றார்.

B4 பெட்டியில் பயணித்த மற்றொரு பயணி கூறும்போது, "ஒடிசா ரயில் விபத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்துடன் தான் நாங்கள் ரயிலில் பயணிக்கிறோம். மீண்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு?" என கேள்வி எழுப்பினார்.

"ரயிலில் போதிய பாதுகாப்பு இல்லை. ஏற்கனவே கோரமண்டல் ரயில் விபத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ரயில்வே நிர்வாகத்தை யார் நம்ப முடியும்?" என மற்றொரு பயணி வினவினார்.

இதைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் பயணிகளை சமரசம் செய்தனர். ரயில்வே அதிகாரி கூறும்போது, "மின்கசிவு காரணமாக ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் ஏசி பெட்டியில் ஏற்பட்ட பழுதை சரி செய்துவிட்டனர். பயணிகளின் கோரிக்கை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

பின்னர் புகை வெளியேறிய பெட்டியில் பயணிகளின் நலன் கருதி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு, 45 நிமிடங்களுக்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.

இதையும் படிங்க: ரயில் விபத்து குறித்த விசாரணையை தொடங்கியது சிபிஐ - அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details