டெல்லி:பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த எதிர்ப்பு மனுவை விசாரித்தது. கே.கே.வேணுகோபால் மற்றும் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஒதுக்கீடுக்கிற்கு ஆதரவாக வாதிட்டனர்.
இந்த மனுவில் மூத்த வழக்கறிஞர்களான ரவி வர்மா குமார், பி வில்சன், மீனாட்சி அரோரா, சஞ்சய் பரிக், கே எஸ் சவுகான் மற்றும் வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் உள்ளிட்டோர் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே EWS ஒதுக்கீட்டை எதிர்த்து வாதிட்டார். இதுகுறித்து அவரது தரப்பில், பொருளாதார அளவுகோல் ஒதுக்கீட்டை வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிவு செய்தால் இந்திரா சாவ்னி (மண்டல்) தீர்ப்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.