மகாராஷ்டிர மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்தனர். தற்போது, இவ்வழக்கின் விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்துள்ளது.
இவ்விவகாரத்தில் மும்பை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸே கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டது.
இப்படி, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அம்பானி வீட்டருகே நின்றுகொண்டிருந்த காரில் மிரட்டல் கடிதத்தை வைத்தது தான்தான் என சச்சின் வாஸே வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக, அம்பானியின் வீட்டருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்டிஓ அலுவலகத்தில் அந்த வாகனம் பதிவாகவில்லை எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.