காந்திநகர்:நாட்டில் கரோனா தடுப்பூசி சம்பந்தமான இதர மருந்துப் பொருள்கள் ஏற்றுமதிக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மீறி சிலர் பிற இடங்களுக்கு அவற்றை ஏற்றுமதி செய்து வருவதாக மும்பை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த காவல் துறையினர், சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ததாகக் கூறி, இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் டாமனை தளமாகக் கொண்ட ’ப்ரக் பார்மா’ என்ற மருந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மணீஷ் சிங்கும் அவரது உதவியாளர் வருண் குந்த்ராவும் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் தடுப்பு மருந்தினை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 18 மருந்து குப்பிகள் மீட்கப்பட்டும் உள்ளன.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "வருண் குந்த்ரா எந்தவொரு உரிமமும் இல்லாமல் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்த புகார்கள் எழவே, காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் போல் நடித்து மருந்துகள் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது, குந்த்ரா ஒரு ஊசி 12,000 ரூபாய் வீதம் 12 ஊசி மருந்துகளை 1.44 லட்ச ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் தடுப்பு மருந்தை வாடிக்கையாளராக நடித்த காவலரிடம் காட்டிய போது மறைந்திருந்த பிற காவல் துறையினர் குந்த்ராவை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருந்துகளை தனது நண்பர் மணீஷ் சிங்கிடம் வாங்கியதாக குந்த்ரா வாக்குமூலம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக மருந்துகள் தேவைப்படுகிறது எனக் கூறி வரவழைத்து மருந்து குப்பிகளுடன் வந்த மணீஷையும் கைது செய்தனர். இதற்கிடையே, இந்த மருந்து குப்பிகள் குறித்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திடம் காவல் துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில், சுமார் 60,000 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் சட்டவிரோதமாக சரக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்துகளை விற்கவோ அல்லது சேமிக்கவோ மணிஷ் சிங்கிடம் எந்த உரிமமும் இல்லை, மருத்துவரின் பரிந்துரையும் இல்லை. அந்த ஆறு ஊசி மருந்துகளையும் லாபத்திற்காக விற்க அவர் திட்டமிட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்து 18 குப்பிகளை பறிமுதல் செய்தோம்" என்று இது குறித்து கூறிய காவல் துறையினர், மோசடி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.