டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். அதன்பின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தில் 2 வந்தேபாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
உத்தரப் பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2.0, பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மூதலீட்டு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை மையமாகக் கொண்டு சேவையாற்றக் கூடிய சூழலை உருவாக்க இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படும்.