டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 29) காலை 11 மணிக்கு மனதின் குரலின் 97ஆவது பதிப்பில் உரையாற்றுகிறார். இந்த பதிப்பு 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் பதிப்பு என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. மனதின் குரல் 96ஆவது பதிப்பு கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்தது.
அப்போது பிரதமர் மோடி, 2022ஆம் ஆண்டில் நாட்டின் செயல்பாடுகளையும், முன்னேற்றத்தையும், பங்களிப்பையும், வளர்ச்சியையும் வெளிப்படுத்தினார். அந்த வகையில், இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.
400 பில்லியன் டாலர்கள் இலக்கை கடந்தது. முதல் உள்நாட்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது. ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் முத்திரையைப் பதித்தது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பியது.
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்களிடம் விளக்கினார். அன்றைய நாளிலேயே அடுத்த பதிப்பில் புது ஆண்டில் சந்திக்கலாம் என்று மக்களிடையே தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இந்த பதிப்பில் பல்வேறு மாநில மக்கள் எழுப்பிய கேள்வுகளுக்கும் பதிலளிக்க உள்ளார். அதில் குஜராத் கலவரம் குறித்தும் கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நாட்டில் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த அரசு முயற்சிக்கிறது - பிரதமர் மோடி