மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்னை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. மலாட் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பா படா பகுதியில் உள்ள அனந்த் நகரில் நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அங்குள்ள குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஒரு வீட்டில் இருந்து அருகில் இருந்த வீடுகளுக்கு மெல்ல பரவிய தீ காட்டுத் தீ போல் நகரையை சூறையாடியது. இந்த கோர தீ விபத்தில் ஏறத்தாழ ஆயிரம் குடிசைகள் எரிந்து சேதமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் பச்சிளம் குழந்தை இந்த தீ விபத்தில் உடல் கருகி இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணுக்கு முன் தாங்கள் வசித்த வீடு கொளுந்து விட்டு எரிவதை கண்டு மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகையை கக்கிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன், பொது மக்கள் கடும் போராட்டம் நடத்தினர்.
மற்ற வீடுகளுக்கும் தீ பரவிய நிலையில், அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்தாக மாறியதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். எரிந்து கொண்டு இருந்த வீடுகளில் இருந்து பொருட்களை மீட்கும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்டனர். வீட்டு உபயோக பொருட்களுடன் தீ எரியும் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.