சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இத்தினத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஒற்றுமை, சகோதரத்துவம், சேவையாற்றும் பண்பு, நல்லிணக்கத்தின் பாதையை மக்களுக்கு காண்பித்தவர் அவர். கடின உழைப்பின் அடிப்படையில் மதிப்பு மற்றும் சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார தத்துவத்தை அவர் அளித்தவர். ஓரே கடவுள் என்ற தத்துவத்தையும் அளித்தவர். அனைத்து தரப்பு மக்களையும் எந்தவித பாகுபாடுமின்றி சமமாக நடத்த வேண்டும். குருநானக்கின் பிறந்த தினத்தில், அவரின் போதனைகள் வழியை பின்பற்றி நடக்க நாம் உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி மான் கி பாத் உரையின் போது, முதல் சீக்கிய குருவின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நாளை நாம் குருநானக் தேவ் ஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளோம். அவரின் செல்வாக்கு உலகம் முழுவதிலும் தெளிவாகக் காணப்படுகிறது. வான்கூவர் முதல் வெலிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை, அவரின் பேச்சுகள் எதிரொலிக்கிறன" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் குருநானக் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், " ஈகோ இல்லாமல், குரு நானக் தேவ் ஜி எனக்கு உண்மையையும் சகோதரத்துவத்தையும் கற்றுக் கொடுத்தார். அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்நன்நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் " எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்கள் குருநானக் பிறந்தநாள் தினத்தில் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.