கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கோவிட்-19 நோயாளிகள் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்துதர முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
இதற்காக கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம், கேரள நகராட்சி சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு அம்மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகளும், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களும் எல்லோரையும் போல வாக்களிப்பதை உறுதிசெய்ய, வாக்குப்பதிவு நாளில் கடைசி ஒரு மணிநேரத்தை ஒதுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வாக்குப்பதிவு நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளில் அனைவரும் வாக்களித்து சாவடிகளை விட்டு வெளியேறிய பின்னர், சரியாக மாலை 5 முதல் 6 மணி வரை கோவிட்-19 நோயாளிகளுக்கு தேர்தலில் வாக்கு செலுத்த இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்காக சுகாதாரத் துறையினரோடு கலந்தாலோசித்து, சிறப்பு நெறிமுறையை வகுத்துள்ளது. மேலும், அதனை பின்பற்ற தேவையான நடைமுறைகளை கேரள அரசு பட்டியலிட்டுள்ளது.
அத்துடன், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையத்தின் மூலம் கேரள அரசு வெளியிட இருப்பது கவனிக்கத்தக்கது.