திருவனந்தபுரம்: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டிசம்பர் 31ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி, அதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அமைச்சரவையின் இந்த முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அவர் வரும் ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளதால், தற்போது சிறப்பு கூட்டம் நடைபெறுவதற்கான அவசியம் இல்லை என பதிலளித்தார். மேலும், மாநில அரசின் வேண்டுகோளையும் மறுத்துவிட்டார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், இந்திய ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.