போர்பந்தர்: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரசுக்கு மூன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி உம்ரேத், நரோடா, தேவ்கத் பரியா ஆகிய மூன்று இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதனிடையே குஜராத்தில் தேசியவாத காங்கிரசின் ஒரேயொரு எம்எல்ஏவான காந்தல் ஜடேஜா, தனது குட்டியானா தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிட இடம் வழங்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தார்.
இவர் கடந்த 2012, 2017ஆம் ஆண்டு பேரவை தேர்தல்களில் போர்பந்தர் மாவட்டத்தில் உள்ள குட்டியானா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். இந்த ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆனால், இந்த தேர்தலில் குட்டியானா தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், காந்தல் ஜடேஜாவுக்கு இடம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், காந்தல் ஜடேஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக குஜராத் என்சிபி தலைவர் ஜெயந்த் படேலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் சுயேட்சையாகவோ அல்லது வேறு கட்சியின் சார்பாகவோ போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவில் மனைவி.. காங்கிரசில் தங்கை.. ஜடேஜாவின் வேண்டுகோள்!