டெல்லி:நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் விதமாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு(ISRO) நிறுவனத்தால், விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதனிடையே, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள கேமராக்கள் எடுத்து உள்ள பூமி மற்றும் நிலவின் போட்டோக்களை இஸ்ரோ நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டர் பகுதியில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில், 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பிதாகரஸ் பள்ளம் முதல் எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் உள்ளிட்டவைகளை துல்லியமாக அதில் காண முடிகிறது.
இதையும் படிங்க: நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி!
சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதையை நெருங்கி உள்ள நிலையில், இரண்டாவது முறையாக அதன் உயரம், 4,313 கிலோ மீட்டர் உயர அளவில் இருந்து 1,347 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவில் தரை இறங்கும் பகுதியான லேண்டர் பகுதியின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் இருந்து 18,000 முதல் 10,000 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து, புகைப்படங்களை எடுத்து சந்திரயான் - 3 விண்கலம் அனுப்பியிருந்தது.