மும்பை: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான சைரஸ் மிஸ்திரி மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்(செப்-4) நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யா ஆற்றுப் பாலம் அருகே இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கிர் பண்டோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அந்த காரில் பயணித்த பெண் மருத்துவர் அனயாதா பண்டோல் முன் இருக்கையில் இருந்த அவரது கணவர் டேரியஸ் பண்டோல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்த விசாரணையில் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை எனவும், அவரது காரில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருந்த சரௌதி சோதனைச் சாவடியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சைரஸ் சென்ற கார் 20 கிமீ தூரத்தை வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரிய வந்துள்ளது.