டெல்லி : ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முத்த உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் நாளை (ஜூலை 7) முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப் பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைல்ட் ஆகியோரிடையே நிலவும் பிரச்சினை மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இரு தலைவர்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சித் தலைமை ஈடுபட்டது.
கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று இரு தலைவர்களும் சமாதானம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இரு தலைவர்களும் கூட்டாக இணைந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க ஒப்புக் கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் யுக்திகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.