லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்திய எல்லைப் பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை, நமது பகுதியை யாரும் கைப்பற்றவில்லை என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனை வரவேற்று சீன ஊடகங்கள் கருத்து வெளியிட்டன. இந்தக் கருத்தால் மோதல் போக்கு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை விமர்சித்த ராகுல் காந்தி, சீன ஊடகங்கள் மோடியைப் புகழ்வதற்கு காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், "நமது ராணுவ வீரர்களை சீனா படுகொலைசெய்துள்ளது. நமது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
இருப்பினும், பிரதமர் மோடியை சீன ஊடகங்கள் புகழ்வதற்கு காரணம் என்ன?" எனப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில் ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
அதில், பாகிஸ்தானுடனோ வேறு அண்டை நாடுகளுடனோ மோதல்போக்கை மேற்கொண்டிருந்தால் தேசியவாதம் அவர்களைக் கடும் நடவடிக்கைகளை எடுக்க தூண்டியிருக்கும், ஆனால் சீனா என்பதால் இந்தியா அதனை தவிர்க்கிறது என ஃபுடான் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனாவிடம் சரணடைந்த மோடி - ராகுல் காந்தி ட்வீட்