உத்தரப் பிரதேசம், மௌ சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் ஆவார்.
இந்நிலையில் இவரது இரண்டு மகன்களான அப்பாஸ் அன்சாரி, உமர் அன்சாரி இருவரும் சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து துப்பு கொடுக்கும் நபர்களுக்கு உத்தரப் பிரதேச காவல் துறை சார்பாக 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் அன்சாரி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதும், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள்களுக்கு முன்னதாக காசிப்பூர் காவல் துறையினர், நிலங்களை அபகரித்தல், மோசடி செய்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக முக்தரின் மனைவி அஃப்ஷா அன்சாரி, அவரது சகோதரர்கள் ஷார்ஜில் ராஜா, அன்வர் ஷெஜாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.