உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் சுந்தர் நகர் கிராமத்திற்கு அருகே உள்ள நவுஜல்பா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்எஸ்பி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நேபாளத்திலிருந்து வந்த லாரி ஒன்றை சோதனையிட்டதில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள் இந்தியாவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக நவுஜல்பா கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரை எஸ்எஸ்பி கைதுசெய்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச நேபாள எல்லையில் குவிந்த நேபாள மக்கள், அங்கு குழாய் உடைந்து தண்ணீர் வீணடிக்கப்படுவதாகப் போராட்டம் நடத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த, மாவட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
கடத்தல் சம்பவத்தை திசை திருப்ப நேபாள மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக எஸ்எஸ்பி வீரர்கள் கருதுகின்றனர். பாதுகாப்பு வீரர்களுக்கும் நேபாள மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி எல்லையில் நடப்பதை இரண்டு ஜவான்கள் காணொலி எடுத்ததைப் பார்த்த இரண்டு நேபாள மக்கள் செல்போனை பறித்ததாகவும் கூறப்படுகிறது.